ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டது பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து திருடிய ஆவணங்களை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு தலைமை வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றம் சாட்டினார். இதன்மூலம் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தை அந்த நாளிதழ் மீறியுள்ளது எனவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து, ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிட்ட நாளிதழுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19-இன் கீழ் பேச்சு மற்றும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்துக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறமுடியாது. கடந்த 1971-ஆம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அரசு ரகசியங்களை ஊடகம் பிரசுரிக்க முடியாது என்ற மத்திய அரசு தலைமை வழக்குரைஞரின் வாதத்துக்கு பதிலளித்துள்ளது என்று பதிவிட்டிருந்தார்.