புது தில்லி: 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கினை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா நிறைவேறியது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அரசு சாரா அமைப்பு ஒன்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அதே சமயம் காங்கிரஸைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் டெஹ்சீன் பூனாவாலா மற்றும் வேறு சில தொண்டு நிறுவனங்களும் இதே போல வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முதலில் நடந்த விசாரணையின் போது இந்த ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளிட்டோரை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்க மறுத்து விட்டது.
இந்நிலையில் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கினை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்னும் மனுதாரரின் புதிய கோரிக்கை, வரும் 28-ம் தேதி பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன் வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.