புது தில்லி: எந்த மாநிலத்திலும் காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியும் கரம் கோர்த்துள்ளன. இங்கு காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. தற்போது இவர்களது கூட்டணி அண்டைய மாநிலமான மத்திய பிரதேசத்திற்கும் நீண்டுள்ளது. இங்கும் காங்கிரஸ் தனியாக போட்டியிடுகிறது.
இந்நிலையில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி கிடையாது என்று மாயாவதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் மத்தியில் பேசிய மாயாவதி கூறியதாவது:
நான் மீண்டும் தெளிவாக சொல்கிறேன். காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி எந்த மாநிலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ளாது. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியுடன் நாம் கூட்டணி அமைத்து உள்ளோம் என்றால் அது பரஸ்பர மரியாதை, நேர்மையான நோக்கங்கள் அடிப்படையில் அமைந்தது ஆகும்.
சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியானது பாஜகவை தோற்கடிப்பதற்கு சரியான கூட்டணி ஆகும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அந்த கட்சியை தோற்கடிப்போம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.