நாட்டின் பிப்ரவரி மாத சில்லறை பணவீக்கம் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2.57 சதவீதமாக அதிகரித்தது.
உணவுப்பொருள்களின் விலைகள் அதிகரித்ததால் சில்லறை விற்பனை விலை அடிப்படையிலான பணவீக்கம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம், கடந்த ஜனவரி மாதம் 2.05 சதவீதமாக இருக்கும் என்று முன்னர் கணிக்கப்பட்டது.
எனினும், அது கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவாக, 1.97 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாத சில்லறை பணவீக்கம் 2.5 சதவீதமாக உள்ளது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிந்தைய அதிகபட்ச சில்லறை பணவீக்க விகிதம் ஆகும். அந்த மாதத்தில் சில்லறை பணவீக்கம் 3.38 சதவீதமாக இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்துக்கான உணவுப் பொருள் பணவீக்கம், முந்தைய 2018-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தைவிட 0.66 சதவீதம் குறைந்து 3.26 சதவீதமாக இருந்தது.
கடந்த ஜனவரி மாதத்து உணவுப் பொருள் பணவீக்கத்தைவிட இது 0.15 சதவீதம் அதிகமாகும் என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.