ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடங்குவதற்கு முன் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை திரும்ப பெற்ற நிலையில் அம்மாநில அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் ஆட்சி கடந்த மாதம் 19-ஆம் தேதியோடு நிறைவடைந்ததையொட்டி, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனிடையே, அம்மாநில சட்டப்பேரவையை ஆளுநர் சத்யபால் மாலிக் கலைத்தார்.
அதனால், காஷ்மீரில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் அறிவிப்போடு காஷ்மீர் தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இதுதொடர்பாக நம்பகத்தக்க வட்டாரங்கள் கூறுகையில்,
"இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரை ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது. இது தொடங்குவதற்கு முன்னதாகவே போதிய பாதுகாப்புடன் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறலாம். சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் 3 கண்காணிப்பாளர்கள் இன்று காஷ்மீருக்கு வருகின்றனர். இந்த குழு அரசியல் கட்சிகள், மாவட்ட அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் டிஜிபி ஆகியோரை சந்திக்கவுள்ளது" என்றனர்.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் தாமதப்படுத்துவதை பாஜக தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் விமரிசித்து வருகின்றன.