மிகப் பலவீனமான மோடி சீன அதிபரைப் பார்த்து  அஞ்சுகிறார்: ராகுல் கடும் தாக்கு

மிகப் பலவீனமான பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸியைப் பார்த்து அஞ்சுகிறார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
மிகப் பலவீனமான மோடி சீன அதிபரைப் பார்த்து  அஞ்சுகிறார்: ராகுல் கடும் தாக்கு


புது தில்லி: மிகப் பலவீனமான பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸியைப் பார்த்து அஞ்சுகிறார் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை, ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு, சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
கடந்த காலங்களில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு உள்ள "வீட்டோ' அதிகாரத்தின் மூலம் சீனா தடுத்துவிட்டது. இப்போதும் சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்திய நடவடிக்கையை சீனா தலையிட்டு தடுத்துள்ளது. பிரதமர் மோடி பலவீனமாக இருப்பதால் சீன அதிபர் ஸி ஸின்பிங்கைப் பார்த்து அஞ்சுகிறார்.

மசூத் அஸார் விவகாரத்தில் சீனாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த முடியாதா, பிறகு, சீன அதிபர் ஸியுடன் படகுச் சாவரி செய்ததால் கிடைத்த நன்மைதான் என்ன? என்றும் ராகுல் காட்டமாகப் பேசியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக சீனா நடவடிக்கை எடுக்கும் போது, அந்நாட்டு அதிபருக்கு எதிராக மோடியின் வாயில் இருந்து ஒரு வார்த்தைக் கூட வெளியே வராது என்று ராகுல் பேசியிருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தை குறிவைத்து, தற்கொலைப் படை பயங்கரவாதி தாக்குதல் நிகழ்த்தினார். 40 வீரர்களை பலிகொண்ட இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதைத்தொடர்ந்து, அந்த அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மையில் கொண்டு வந்தன. இந்த தீர்மானம் மீதான எதிர்ப்பை பதிவு செய்வதற்கான காலக்கெடு புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடையவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சீனா முட்டுக்கட்டை போட்டது.

அதாவது, அந்த தீர்மானத்தை ஆராய்வதற்கு மேலும் கால அவகாசம் வேண்டும் என்று சீனா தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சீனாவில் இந்த நடவடிக்கையால் தீர்மானம் 6 மாதங்கள் வரை நிறுத்திவைக்கப்படும். அதன் பிறகும், இந்த கால அவகாசம் 3 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com