பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் பதவிக்காலம் இருக்கும் மூத்த காவல் துறை அதிகாரிகளையும், மாநில காவல் துறை தலைவராக (டிஜிபி) நியமிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் காவல் துறை விதிகளில் சில சீர்திருத்தங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு(யுபிஎஸ்சி) உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. அதன்படி, பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவிக் காலம் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளை மட்டுமே டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங் பொது நல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், டிஜிபியாக நியமனம் செய்வதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவிக் காலம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையால், பல நேர்மையான மூத்த அதிகாரிகள் டிஜிபியாக பணியாற்ற முடியாமல் போகும். இந்த நிபந்தனையால், டிஜிபி நியமனத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது. அரசுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். சில அதிகாரிகள் தற்காலிக டிஜிபியாக நியமிக்கப்பட்டு, பின்னர் நிரந்தர டிஜிபியாக மாற்றப்படுகின்றனர். அதனால் இந்த உத்தரவில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
அந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் வாத, பிரதிவாதங்களை கேட்ட நீதிபதிகள், ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் பதவிக் காலம் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளையும் டிஜிபியாக நியமிக்கலாம். யுபிஎஸ்சி மேற்கொள்ளும் அத்தகைய நியமனங்கள் தகுதியின் அடிப்படையிலும், பணி மூப்பு அடிப்படையிலும் மட்டுமே இருக்க வேண்டும். தற்காலிக டிஜிபியாக யாரையும் நியமிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.