தேர்தல் விதிகளை மீறி காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் தள்ளுபடி செய்யப்பட்டதாக குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் ஒரு நாள் செயற்குழுக் கூட்டம் குஜராத் மாநிலம், ஆமதாபாதில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த ஆலோசனைக் கூட்டத்தை விதிகளை மீறி நடத்தியுள்ளதாக தனித்தனியாக தேர்தல் அதிகாரியிடம் 2 புகார்கள் அளிக்கப்பட்டன.
இதுதொடர்பாக குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.முரளிகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேல் நினைவகத்தில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தேர்தல் விதிமுறைகளை மீறி நடத்தப்பட்டதாகக் கூறி, ரமேஷ் படேல், சுரேஷ் படேல் ஆகிய இருவரும் புகார் மனு அளித்தனர்.
மாவட்ட மேம்பாட்டு அதிகாரியின் அறிக்கையின் அடிப்படையில் அந்தப் புகார்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குவந்த பிறகு, குஜராத்தில் 60,000 பதாகைகள் அப்புறப்படுத்தப்பட்டன. 5,000க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைமுறைகளை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார் முரளிகிருஷ்ணன்.