144 தடை உத்தரவை மீறிய வழக்குகளில் ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்.பி. கிரோடி லால் மீனாவுக்கு அந்த மாநில நீதிமன்றம் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
மேலும், ரயில்வே துறைக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், ரூ.10,000 அபராதமும் செலுத்த வேண்டும் என்று அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான கிரோடி லால் மீனா, கடந்த 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் கூட்டியதாக இரு வழக்குகள் தொடரப்பட்டன.
ராஜஸ்தான் மாநிலம் கங்காபூரிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில், 144 தடை உத்தரவை மீறியது, அதிகாரிகளின் உத்தரவை அலட்சியம் செய்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகளுக்காக, கிரோடி லால் மீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும், அவரது செயலால் பாதிக்கப்பட்ட ரயில்வே துறைக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், மேலும் அபராதமாக ரூ.10,000-மும் செலுத்த வேண்டும் என்று கிரோடி லால் மீனாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.