காங்கிரஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர் அரவிந்த் சர்மா இன்று (வெள்ளிக்கிழமை) பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர் அரவிந்த் சர்மா ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் மற்றும் அம்மாநில பாஜக பொறுப்பாளர் அனில் ஜெயின் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். அவர் மோடி அரசை பாராட்டி பேசுகையில், "சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக ஏழைகள் இந்த அரசின் கீழ் முன்னேற்றம் கண்டுள்ளனர்" என்றார்.
அரவிந்த் சர்மா பாஜகவில் இணைந்தது கட்சியை பலப்படுத்தும் என்று மனோகர் லால் கத்தார் மற்றும் அனில் ஜெயின் ஆகியோர் தெரிவித்தனர்.
அரவிந்த் சர்மா 1996-இல் சுயேட்சை வேட்பாளராக சோனேபத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, 2004 மற்றும் 2009-இல் காங்கிரஸ் கட்சிக்காக கர்னல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014-இல், பாஜகவின் அஷ்வினி சோப்ராவிடம் தோல்வியடைந்தார்.
வர இருக்கும் மக்களவைத் தேர்தலில் அஷ்வினி சோப்ரா போட்டியிடமாட்டார் என்று தெரிகிறது. அதனால், தற்போது பாஜகவில் இணைந்துள்ள அரவிந்த் சர்மா பாஜக சார்பில் கர்னல் தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.