அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை பின்னர் நடத்துவதில் என்ன பிரச்னை? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 10-ஆம் தேதி வெளியிட்டது. அதில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன், காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் காரணமாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை பின்னர் நடத்துவதில் என்ன பிரச்னை? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடும்படி எங்களை நிர்பந்திக்காதீர்கள் எனக் கூறிய உச்சநீதிமன்றம் மார்ச் 25க்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.