இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொது செயலாளர் டி. டி. வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோர் சார்பில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செயப்பட்டன.
அதில், "தேர்தல் ஆணையம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது சரியே என்று தில்லி உயர்நீதிமன்றம் பிப்ரவரி 28-இல் பிறப்பித்த உத்தரவுக்கும், இபிஎஸ் - ஓபிஎஸ் தலைமையிலான அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த 2017, நவம்பர் 23-இல் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடையும் வரையிலும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவற்றில் குக்கர் சின்னத்தையும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெயரையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.,சுக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அத்துடன் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் மார்ச் 25ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.