50 சதவிகித வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ள உதவும் வகையில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் இந்த வசதி அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் முறையாக அமைக்கப்படவில்லை. இந்த வசதியை தேர்ந்தெடுக்கப்படும் ஏதாவது ஒரு தொகுதியில் ஒரு வாக்குப்பதிவு மையத்தில் மட்டுமே செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் கோவாவில் நடந்த தேர்தலின்போது அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், 50 சதவிகித வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச்சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இம்மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமனறம் வழக்கை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.