பிரியங்கா காந்தி இதற்கு முன்பும் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார் என்பதால் அவரது வருகை பாஜகவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு உத்தரப் பிரதேசம் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக பிரியங்கா காந்தி இருக்கிறார். அதனால், இவரது வருகை உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு முதன்முதலாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,
"இந்த முறை பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது உட்கட்சி சார்ந்த விஷயம். இதற்கு முன்பும் அவர் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார். இந்த முறையும், அவரது வருகை பாஜகவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது" என்றார்.