ஆந்திர மாநில முன்னாள் முதல்வவர் ஒய்எஸ்ஆர் ராஜசேகர ரெட்டியின் சகோதரரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர், மக்களவையின் முன்னாள் உறுப்பினரும், ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சருமான ஒய்எஸ்ஆர் விவேகனாந்த ரெட்டி(68) கடப்பா மாவட்டம் புலிவென்டுலா நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானர்.
இந்நிலையில், விவேகானந்த ரெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
விவேகானந்த ரெட்டி மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். ஆனால், அவருடைய உடலில் காயங்கள் உள்ளது. எனவே இது திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும். இந்த மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டியுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து தடயவியல் ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த மரணத்தின் மீதான சந்தேகம் அதிகரிக்கிறது. ஆதாரங்களை அழிப்பது மிகப்பெரிய குற்றச்செயலாகும்.
ஆனால், தற்போது விவேகானந்த ரெட்டி மரணத்துக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சிபிஐ விசாரணை கோருகிறது. அவ்வாறு ஒருவேளை இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டால், மத்திய அரசு அக்கட்சியினரை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும். அதுவே மாநில காவல்துறை விசாரித்தால், உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்று தெரிவித்தார்.