லக்னௌ: விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் இரண்டு முக்கிய தலைவர்கள் போட்டியிடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணியில் சேர்க்கபடவில்லை.
தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் இந்த இரு கட்சிகளும் சோனியா மற்றும் ராகுல் போட்டியிடும் அமேதி, ரேபரேலியில் மட்டும் போட்டி இல்லை என்றும் அறிவித்தனர். அத்துடன் அவர்களை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
அகிலேஷ் யாதவ் அசம்கார்க் தொகுதியிலும், மாயாவதி, நஜினா அல்லது அம்பேத்கர்னாகர் தொகுதியிலும் வேட்பாளராக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர்கள் இருவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தத்தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால் அவர்கள் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 30 பிரசார ஊர்வலங்கள் நடத்த திட்டமிட்டுள்ள மாயாவதி, அவற்றில் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து 11 பிரசார ஊர்வலங்கள் நடத்த உள்ளார் என்று தெரிய வருகிறது.