ஏழுமலையானை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் குடும்பத்தினருடன் வழிபட்டார்.
ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இத்தேர்தலுக்கான பிரசாரத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை மாலை திருப்பதியில் மேற்கொண்டார். அதற்கு முன் அவர் தன் குடும்பத்தினருடன் திருமலைக்கு சென்றார்.
வைகுண்டம் காத்திருப்பு அறை வழியாக ஏழுமலையான் கோயில் முன் வாசலை அடைந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்றனர்.
கொடிமரத்தை வணங்கிச் சென்ற அவர் ஏழுமலையானை தரிசித்து திரும்பினார். அவரை ரங்கநாயகர் மண்டபத்தில் குடும்பத்தினருடன் அமர வைத்து தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீர்வாதம் செய்வித்தனர். ஏழுமலையான் பிரசாதங்கள், சுவாமி படம் ஆகியவற்றை வழங்கினர்.