மங்களூரு அருகேயுள்ள கடல் பகுதியில் கடல் ஆராய்ச்சிக் கப்பலில் நிகழ்ந்த தீ விபத்தில், 16 விஞ்ஞானிகள் உள்ளிட்ட 46 பேரை கடலோர காவல் படையினர் மீட்டனர்.
கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட மங்களூரு அருகேயுள்ள கடல் பகுதியில் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருந்த கடல் ஆராய்ச்சிக் கப்பலான சாகர் சம்பாதாவில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
தகவலின்பேரில் மும்பையில் உள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தினரும், கடலோரக் காவல் படையினரும் விரைந்து சென்றனர். அப்போது, கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த கடல் ஆராய்ச்சிக் கப்பலில் 8 மணி நேரம் போராடி 16 விஞ்ஞானிகள், 30 கப்பல் ஊழியர்களை மீட்டனர். இதில் கப்பலின் 8 அறைகள் தீயில் சேதமடைந்தன.
இதுகுறித்து மேற்கு மண்டல கடலோரக் காவல் படை ஐஜி விஜய்சப்பேக்கர் கூறியது: -
புவி அறிவியல் துறையின் கல்வி மையத்துக்குச் சொந்தமான சாகர் சம்பாதா கடல் ஆராய்ச்சிக் கப்பலில் 16 விஞ்ஞானிகள், 30 கப்பல் ஊழியர்கள் இருந்தனர். தீ விபத்து நிகழ்ந்ததாக தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து சென்று தீயை அணைத்ததோடு, மீட்புப் பணியிலும் ஈடுபட்டோம். இதில் 3 பேர் பெண்கள் உள்ளிட்ட 16 விஞ்ஞானிகள், 30 கப்பல் ஊழியர்கள் மீட்கப்பட்டனர்.
கப்பலில் தங்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்க கப்பல் ஊழியர்கள் சிரமப்பட்டுள்ளனர். கடலோரக் காவல் படை கப்பல்களான விக்ரம், சுஜய் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
தீ பரவாமல் தடுக்க, தீத்தடுப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. தீ அணைத்த பிறகு, கப்பலுக்குள் சென்ற கடலோரக் காவல் படையினர் 8 அறைகள் தீயில் சேதமடைந்ததைக் கண்டறிந்தனர். 8 மணி நேரம் நடைபெற்ற தீயணைப்புப் பணியின் போது, 46 பேர் மீட்கப்பட்டனர்.
பின்னர், சாகர் சம்பாதா கடல் ஆராய்ச்சிக் கப்பல் புதிய மங்களூரு துறைமுகத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது என்றார் அவர்.