மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 27 வேட்பாளர்கள் அடங்கிய 4ஆவது கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வெளியிட்டது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி.யாக உள்ள சசி தரூருக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
27 வேட்பாளர்களில் 12 பேர் கேரளம், 7 பேர் உத்தரப் பிரதேசம், 5 பேர் சத்தீஸ்கர், 2 பேர் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஒரு வேட்பாளர் அந்தமான்-நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவராவார்.
கேரளத்தின் எர்ணாகுளம் தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தாமஸýக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அந்தத் தொகுதியில் எர்ணாகுளம் தொகுதி எம்எல்ஏவான ஹைபி ஈடனுக்கு போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா எம்.பி.யான ஆன்டோ ஆண்டனி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, அருணாசல் (மேற்கு) தொகுதியில் போட்டியிடுகிறார்.
கேரளத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில், காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் போட்டியிடுகிறது. இன்னும் 4 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் பென்னி பெஹனான் சாலக்குடியிலும், காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் டீன் குரியகோஸ் இடுக்கி தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர்.