கோவா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான மனோகர் பாரிக்கர் காலமானார்
கோவா முதல்வராக இருந்து வந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கணைய அழற்சியால் பாதிக்கப்பட்ட நிலையில், கோவா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்காவின் நியூயார்க், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை, மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அதன் பின்னர் தனது தனிப்பட்ட இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சை பெற்றுவந்த பாரிக்கர், கடந்த ஜனவரி மாதம் கோவா சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்று, பட்ஜெட் தாக்கல் செய்தார். கூட்டத் தொடரின் நிறைவு நாளான ஜனவரி 31-ஆம் தேதி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை முடிந்து கடந்த மாதம் 5-ஆம் தேதி கோவா திரும்பினார்.
இதற்கிடையே பாஜக எம்எல்ஏ பிரான்சிஸ் டி சோசா சமீபத்தில் காலமானார். இதனையடுத்து பாஜக பெருபான்மையை இழந்துவிட்டது என்று கூறி காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தது.
இதனிடையே, மனோகர் பாரிகரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அந்த மாநில முதல்வர் அலுவலகம் இன்று மாலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என்று குடியரசுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாரிக்கரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
"மனிதனின் மனதால் எந்த ஒரு நோயையும் வெல்ல முடியும்" என நோய்வாய்ப்பட்ட நிலையில் தன்னம்பிக்கை தெரிவித்திருந்த மனோகர் பாரிக்கர் என்ற மகத்தான மனிதர் காலமானார்.