கோவா: பாரிக்கர் இல்லாத பாஜக தேர்தல் பிரசாரம்

கோவா மாநிலத்தில், மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் பிரசாரத்தில் மாநில முதல்வரும், அக்கட்சியின் முக்கிய பிரசாரத் தலைவருமான மனோகர் பாரிக்கர் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில், மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் பிரசாரத்தில் மாநில முதல்வரும், அக்கட்சியின் முக்கிய பிரசாரத் தலைவருமான மனோகர் பாரிக்கர் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் கோவாவில் பாஜக பிரசாரத்துக்கான முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்து வரும் பாரிக்கர், தற்போது கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
 இதுகுறித்து பாஜக எம்எல்ஏவும், மாநில சட்டப்பேரவை துணைத் தலைவருமான மைக்கேல் லோபோ கூறியதாவது:
 இம்முறை மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தில் மனோகர் பாரிக்கர் பங்கேற்கப்போவதில்லை. எனினும், தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் வீட்டில் இருந்தபடியே கண்காணிப்பார். மாநிலத்தில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பாரிக்கரின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு பிரத்யேக குழு செயல்பட்டு வருகிறது.
 தேர்தல் தொடர்பான ஒவ்வொரு முடிவும் பாரிக்கரின் ஒப்புதலுடனே மேற்கொள்ளப்படுகிறது. பிரசாரத்தில் பாரிக்கர் பங்கேற்காதது, பாஜகவுக்கான வெற்றி வாய்ப்புகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று மைக்கேல் லோபோ கூறினார்.
 எனினும், பிரசாரத்தில் பாரிக்கர் பங்கேற்காதது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. இதுகுறித்து, கோவா சுரக்ஷா மஞ்ச் கட்சித் தலைவர் சுபாஷ் வெலிங்கர் கூறுகையில், "பாரிக்கர் துணை இல்லாமல் கோவாவில் தேர்தலை எதிர்கொள்வது பாஜகவுக்கு கடினமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் அவருக்கு அடுத்தபடியாக கோவாவில் குறிப்பிடும் வகையில் எந்தவொரு தலைவரும் பாஜகவில் இல்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com