மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் பழைய பிரச்னைகளை மீண்டும் பேசி, தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
வேலையின்மை, வறுமை ஒழிப்பு ஆகியவை உண்மையான தேர்தல் பிரச்னைகளாக இருக்க வேண்டும். ஆனால், அரசின் தோல்விகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் புதைந்து போன பழைய பிரச்னைகளை மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார். அதற்கான விளம்பரங்களுக்காக ரூ.3,044 கோடி செலவிடப்பட்டுள்ளது.
அந்தத் தொகையை, உத்தரப் பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் கல்வி, மருத்துவ வசதியை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், பாஜகவுக்கு பொதுமக்களின் நலன், கல்வி ஆகியவற்றை விட தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதே மிகவும் முக்கியத்துவம் நிறைந்த விஷயம் என்று அந்தப் பதிவில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.