நியூஸிலாந்தில் இரு மசூதிகளில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அவர்களில் இருவர் தெலங்கானாவையும், ஒருவர் கேரளத்தையும், மற்றொருவர் குஜராத்தையும் சேர்ந்தவர்கள்.
இதில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த ஃபர்ஹாஜ் அசன் மற்றும் இம்ரான் அகமது கான் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாகவும், அதை அவர்களது குடும்பத்தினர் உறுதி செய்தனர்.
அதேபோல், கேரள மாநிலம் கொடுங்ஙல்லூரைச் சேர்ந்த அன்சி அலிபாவா என்பவரும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இந்தத் தகவலை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்துள்ளார். அந்தப் பெண் நியூஸிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படித்து வந்ததாகவும், அவரது கணவர் அப்துல் நாசர் கொச்சியைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அந்த துப்பாக்கிச் சூட்டில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூசா வாலி என்பவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, இந்தியர்கள் 9 பேர் காணாமல் போனதாக கூறப்படுவது தொடர்பாக நியூஸிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் உறுதியான தகவல்கள் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், தாக்குதல் சம்பவத்தை அடுத்து காணாமல் போனதாக நியூஸிலாந்து செஞ்சிலுவை அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியர்கள் சிலர் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறது.