உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் புவன் சந்திர கந்தூரியின் மகன் மணீஷ் கந்தூரி, சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
தேர்தல் சமயத்தில் பாஜக மூத்த தலைவரின் மகன் காங்கிரஸில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மணீஷ் கந்தூரியின் வரவால் காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரிக்கும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். பெளரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அவரை களமிறக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது, அவரது தந்தை பி.சி.கந்தூரி எம்.பி.யாக இருந்த தொகுதியாகும்.
முன்னாள் ராணுவ ஜெனரலான பி.சி.கந்தூரி, பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, "மணீஷ் கந்தூரி ஏன் இங்கு இருக்கிறார்? அவரது தந்தை, பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக இருந்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?
தனது வாழ்வையே ராணுவத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டாலும் கூட, நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக அந்த தேச பக்தரை பதவியில் இருந்து நீக்கிவிட்டனர்'' என்றார்.