பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக கூறப்படும் விவகாரத்தில் பிரிவினைவாத கட்சிகளில் ஒன்றான ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவரான மீர்வாய்ஸ் ஒமர் ஃபாரூக்கிற்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மூலம் சம்மன் அனுப்பியதை மத்திய அரசு பெருமையாக கருதி விடக்கூடாது என தேசிய மாநாட்டுக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசிய மாநாட்டுக் கட்சியின் பொது செயலாளர் அலி முகமது சாகர் மேலும் கூறியதாவது:
மீர்வாய்ஸுக்கு எதிராக சம்மன் அனுப்பியுள்ள மத்திய அரசு, அவரை தில்லியில் ஆஜராகுமாறு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, அவருக்கு சம்மன் அனுப்பிய போதே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாக அரசுக்கு தெரிவித்து விட்டார்.
சமூக நிலையை கருத்தில் கொண்டு அவரிடம் ஸ்ரீநகரில் மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, மீர்வாய்ஸுக்கு கடந்த வியாழக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பு புதிதாக சம்மன் அனுப்பி இருந்தது.
அந்த சம்மனில், பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக தில்லியில் உள்ள என்ஐஏவின் தலைமை அலுவலகத்திற்கு வரும் 18ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது.
"மீண்டும் சம்மன் அனுப்பி அவருக்கு அவமானம் மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த அணுகுமுறை அவரது ஆதரவாளர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அமைந்துள்ளது.
காஷ்மீர் மக்களால் போற்றப்படும் மீர்வாய்ஸ் குடும்பத்தின் பங்கு காஷ்மீர் வரலாற்றில் முக்கியப் பங்கு வகிப்பதாகும்' என்றும் சாகர் மேலும் தெரிவித்தார்.