நாட்டின் முதல் லோக்பால் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (செவ்வாய்கிழமை) அறிவித்தார்.
உயர் பதவியில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்தியில் லோக்பால் அமைப்பையும், மாநிலங்களில் லோக் ஆயுக்த அமைப்பையும் ஏற்படுத்துவதற்கான சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
லோக்பால் நியமன விதிகள்:
லோக்பால் அமைப்பின் தலைவராக நியமிக்கப்படுபவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ இருந்திருக்க வேண்டும். லோக்பால் ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் வரை இடம்பெறலாம். அதில் 4 உறுப்பினர்கள் நீதித்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பேராவது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயது வரையில் ஆகும். லோக்பால் தலைவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும். லோக்பால் உறுப்பினருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
இந்நிலையில், லோக்பால் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்பால் ஆணைய உறுப்பினர்கள்
தலைவர்:
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ்
நீதித்துறையைச் சேர்ந்த உறுப்பினர்கள்:
நீதிபதி திலிப் பி.போசலே, நீதிபதி பி.கே. மொஹண்டி, நீதிபதி அபிலாஷ குமாரி மற்றும் நீதிபதி ஏ.கே. டிரிபாதி
இதர உறுப்பினர்கள்:
தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங் மற்றும் ஐபி கௌதம்