மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் 2 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், 1,750 டெட்டனேட்டர்களுடன் வந்த வேனை பறிமுதல் செய்த போலீஸார் அதன் ஓட்டுநரையும் திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து ஜெய்கேதா காவல்நிலைய ஆய்வாளர் கணேஷ் கெளரவ் கூறியதாவது: நாசிக் மாவட்டம் சிசாலி பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள முல்ஹர் கிராமத்தில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, குஜராத்தில் இருந்து மகாராஷ்டிரம் வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 2 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகளும், 1,750 டெட்டனேட்டர்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அவை, அனைத்தும் முறையான அனுமதியின்றி கொண்டு வரப்பட்டவை என்பதால், அந்த வேன் ஓட்டுநரான ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவை சேர்ந்த பாவர்லால் குர்ஜாரிடம் (28) விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அவருடன் வந்த, ராஜஸ்தான் மாநிலம் புத்தாலால் குர்ஜார் என்பவர் தப்பி ஓடி விட்டார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.