கோவா புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பிரமோத் சாவந்த் நாளை பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார்.
கோவா மாநில முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். இதையடுத்து, அம்மாநில புதிய முதல்வராக சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த் பதவியேற்றார். இதனிடையே, அம்மாநில ஆளுநரிடம் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தது.
இதையடுத்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று பிரமோத் சாவந்த் அம்மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி, இன்று காலை 11.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று காலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக 20 உறுப்பினர்களின் ஆதரவுடன் தங்களது பெரும்பான்மையை நிரூபித்தது.
இதனால், அங்கு நீடித்து வந்த ஆட்சி குழப்பம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த பிரமோத் சாவந்த், "பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாளை தில்லி செல்கிறேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்றார்.