நீரவ் மோடியை கைது செய்ததற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது வரவேற்பை தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு லண்டன் தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர், லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், அவரை வரும் 29-ஆம் தேதி ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த கைது நடவடிக்கையை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று (புதன்கிழமை) தெரிவிக்கையில்,
"வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த கைது ஆணைக்கு இணங்க நீரவ் மோடியை இங்கிலாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளதை வரவேற்கிறோம். நீரவ் மோடியை விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக இங்கிலாந்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து இந்த விவகாரத்தை இந்திய அரசு தொடர்ந்து கண்காணிக்கும்" என்றார்.