தேர்தலின் ஊடே கோடையும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கோடையில் மக்கள் தேடும் முக்கிய இரண்டு விஷயங்களில் ஒன்று தண்ணீர். அடுத்தது நிழல். தண்ணீருக்காக மாநில அரசு எத்தனையே பிரயத்தனங்களை செய்து கொண்டிருக்கிறது.
அடுத்தது நிழல்.. நிழலா? அதற்கு அரசு என்ன செய்யும்? என்று கேட்கிறீர்களா? நிழல் தரும் அழகிய மரங்களை எல்லாம் வெட்டோ வெட்டு என்று வெட்டித் தள்ளிவிட்டோம். இருக்கும் ஒரு சில மரங்களும் மக்கள் கால்தடம் பதியாத இடங்களில் மட்டுமே விட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிழலுக்கு எங்கே செல்வது?
தமிழகத்துக்கே குடையா பிடிக்க முடியும்? முடியாது. ஆனால் குறைந்தபட்சம் பேருந்து நிறுத்தங்களிலாவது நிழற்குடைகளை அமைக்கலாமே என்பதுதான் பெரும்பாலான பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லாமல் பயணிகள் மழைக்காலத்தில் நனைந்தபடியும், வெயில் காலத்தில் காய்ந்தபடியும் நிற்கும் அவல நிலையே நீடிக்கிறது.
அடுத்தடுத்து ஆண்டுகளில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிழற்குடைகளின் தேவை கட்டாயமாகி வருகிறது.
எனவே, கோடைக்காலம் உக்கிரமாவதற்குள் தமிழகத்தில் நிழற்குடையே இல்லாத பேருந்து நிறுத்தங்களை தமிழக அரசு உருவாக்கலாம். இது கோடைக்காலம் என்பதோடு, தேர்தல் காலம் என்பதையும் மனதில் வைத்துக்கூட இதைச் செய்யலாம். எந்தத் தவறும் இல்லை.. நல்லது நடந்தா சரிதானே..?