காங்கிரஸின் பதவி ஆசையால் நாடு பேரிழப்பைச் சந்தித்துள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸின் பதவி ஆசையால், நாடு பேரிழப்பைச் சந்தித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். 
காங்கிரஸின் பதவி ஆசையால் நாடு பேரிழப்பைச் சந்தித்துள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு


காங்கிரஸின் பதவி ஆசையால், நாடு பேரிழப்பைச் சந்தித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். 
கடந்த கால நிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொண்டு, நாட்டு மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் மோடி தனது வலைப்பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாடாளுமன்றம், நீதிமன்றங்கள், ஊடகம், பாதுகாப்புத் துறை உள்ளிட்டவற்றுக்கு பாஜக அரசு உரிய மரியாதை அளித்துள்ளது. ஆனால், கடந்த காலங்களில், குடும்ப ஆட்சி (காங்கிரஸ் ஆட்சி) நடைபெற்று வந்தபோது, அவற்றுக்கு சற்றும் மரியாதை அளிக்கப்படவில்லை. அவை தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வந்துள்ளன. பாஜக அரசின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், மக்களவை 85 சதவீதத் திறனுடன் செயல்பட்டுள்ளது. குடும்ப ஆட்சி நடைபெறாமல் இருந்தால், நாடு சிறப்பாக இயங்கும் என்பது இதில் தெளிவாகியுள்ளது.
கருத்துச் சுதந்திரம் பறிப்பு: முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, பத்திரிகை சுதந்திரம் மறுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட முதலாவது அரசமைப்பு சட்டத்திருத்தம், பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்க முயன்றது. பத்திரிகைகள் உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றி வந்தது, அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்குப் பிடிக்கவில்லை. அவர்களின் ஆட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் நபர்களைச் சிறையில் அடைக்கும் வகையிலான சட்டங்களை காங்கிரஸ் இயற்றியது. ஆனால், இத்தகைய சட்டத்தினால், மக்களின் மனநிலை மாறாது. மக்கள் மற்றும் பத்திரிகைகளின் கருத்து தெரிவிக்கும் உரிமையைப் பறித்ததன் மூலம், மக்களின் வெறுப்பை காங்கிரஸ் சம்பாதித்துள்ளது.
குடியரசுத் தலைவர் ஆட்சி: குடும்ப ஆட்சியைக் காக்கவே, நாடு முழுவதும் அவசரநிலையை காங்கிரஸ் பிரகடனப்படுத்தியது. மேலும், காங்கிரஸ் கட்சி, 
100-க்கும் மேற்பட்ட முறை, குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலங்களில் அமல்படுத்தியுள்ளது. அவற்றில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மட்டும் 50-க்கும் மேற்பட்ட முறை, குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தினார். மாநிலங்களில் ஆட்சி செய்வோரையோ அல்லது அவர்களது ஆட்சி முறையோ காங்கிரஸுக்குப் பிடிக்கவில்லை எனில், அந்த ஆட்சியைக் கலைத்துள்ளனர். காங்கிரஸின் பதவி ஆசையால், நாடு பல்வேறு பேரிழப்புகளைச் சந்தித்துள்ளது.
நீதித்துறை அவமதிப்பு: காங்கிரஸ் கட்சி, நீதிமன்றங்களைப் பல்வேறு முறை அவமதித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தை விட, ஒரேயொரு குடும்பத்தை மட்டும் நீதித்துறை மதித்து நடக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி விரும்பியது. நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பு, காங்கிரஸுக்கு எதிராக அமைந்துவிட்டால், நீதிபதிகளை அவமானப்படுத்துவதை அக்கட்சி வழக்கமாகக் கொண்டிருந்தது. மேலும், அவர்களைப் பதவி நீக்கம் செய்யவும் காங்கிரஸ் தயங்கியதில்லை. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் இதே நிலையே ஏற்பட்டது.
மத்திய அமைப்புகள் மதிப்பிழப்பு: மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி), திட்டக்குழுத் தலைவர் உள்ளிட்ட 
எவரையும் காங்கிரஸ் மதித்ததில்லை. 
மன்மோகன் சிங் தலைமையில் இயங்கிய திட்டக்குழுவை, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, கோமாளிகளின் குழு என்றழைத்தார். அவர்களின் ஆட்சிக்காலத்தில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ), காங்கிரஸ் புலனாய்வு அமைப்பாக மாறியது.
ஊழல்கள்: சுதந்திரத்துக்குப் பிறகு பதவியேற்ற ஒவ்வொரு காங்கிரஸ் அரசிலும், ஊழல்கள் மிகுந்து காணப்பட்டன. முக்கியமாக பாதுகாப்புத் துறையில் ஊழல்கள் மலிந்திருந்தன. பாதுகாப்பு வாகனத்தில் தொடங்கிய ஊழல், துப்பாக்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் என அனைத்திலும் பரவியது. இதில் குற்றம்சாட்டப்பட்ட இடைத்தரகர்கள் அனைவரும், காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர்.  
எனவே, வாக்களிப்பதற்கு முன் கடந்த கால நிகழ்வுகளை மனதில்கொண்டு, மக்கள் அனைவரும் தெளிவான மனநிலையுடன் வாக்களிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com