காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்களை சக வீரர் ஒருவரே சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரின் உதாம்பூர் பகுதியில் பட்டால் பாலியா ராணுவ முகாமில் நேற்றிரவு சிஆர்பிஎப் வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த உபி.,யின் கான்பூரை சேர்ந்த அஜித்குமார் என்ற வீரர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் சக வீரர்களான போக்ராமால், யோகேந்திர சர்மா, உமேத் சிங் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து அஜித்குமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் உதாம்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.