எனது தந்தையின் மரணத்தில் தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என ஜெகன் மோகன் ரெட்டி சகோதரி தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மர்ம மரணம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஜெகன்மோகன் ரெட்டி தனது அரசியல் சுயநலத்துக்காக கொலை செய்திருக்கக்கூடும் என்று சந்திரபாபு நாயுடு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், விவேகானந்த ரெட்டியின் மக்ள் ஒய்.எஸ்.சுனிதா செய்தியாளரக்ளிடம் கூறியதாவது:
எதிர்பாரா விதமாக எனது தந்தை மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அவரது மரணத்தில் தேவையற்ற அவதூறுகளைப் பரப்பி களங்கம் ஏற்படுத்த வேண்டாம். இதுகுறித்து விசாரிக்க சிறப்புப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற தேவையற்ற பேச்சுக்களால் அவர்களது விசாரணைகளும் திசை திருப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக வேண்டும் என்பது தான் எனது தந்தையின் கனவாக இருந்தது. மேலும் அதற்காக அவரும் அயராது உழைத்து வந்தார். இந்நிலையில், எங்கள் குடும்பத்தில் பிரச்னை இருப்பதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது மிகவும் அபத்தமான பொய் தகவலாகும் என்றார்.