பாட்னா: பிகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் இடையேயான மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
அதேசமயம் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் லாலு பிரசாத் யாதாவின் ராஷ்டீரிய ஜனதா தளம் இடையே மகா கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. காங்கிரஸ் முதலில் 11 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் 8 தொகுதிகள்தான் தர முடியும் என லாலு கட்சி கூறியது. அதிக தொகுதிகள் வேண்டும் என்றால் தனியாக போட்டியிடுங்கள் என பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டதது என்று தகவல்கள் பரவியது.
இந்நிலையில் பிகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் இடையேயான மகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றுள்ளது.
இறுதி செய்யப்பட்ட முடிவின்படி 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜனதா கூட்டணியிலிருந்து பிரிந்த உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்டீரிய லோக் சாம்தா கட்சிக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகள் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.