
தார்வாடில் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற மீட்புப் பணிகள்.
கர்நாடக மாநிலம், தார்வாடில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என அந்த மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் வலியுறுத்தினார்.
தார்வாட் குமரேஸ்வரநகரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 5 மாடிக் கட்டடம், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததில் கீழ்மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை மாலை வரை 12 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. காயமடைந்த 65-க்கும் மேற்பட்டவர்களும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலர் இடிப்பாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், கட்டட இடிபாடுகளை பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் வியாழக்கிழமை பார்வையிட்டார். பின்னர், மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தார்வாடில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 5 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், அப்பாவிகள் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். கட்டடம் இடிந்த விழுந்ததற்கு அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும். கட்டட இடுபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களூக்கு ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரூ. 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். கட்டட இடிபாடுகளில் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகளை தேர்தல் நடத்தை விதிமுறைக்குள் கொண்டு வரக்கூடாது என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...