இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகள்:  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல்

இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்புடன் அந்நாட்டு ராணுவம் மேற்கொண்ட இறுதிப் போரில் 40,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். 
அப்போது ஏராளமான மனித உரிமைமீறல்களிலும், போர்க் குற்றங்களிலும் ராணுவம் ஈடுபட்டது என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும். இவை அனைத்துக்கும் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபட்சவும் முக்கியக் காரணமாக இருந்தார் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இலங்கை அரசுத் தரப்பு தகவலின்படி இறுதிப் போரின்போது 20,000 தமிழர்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த போர் குற்றங்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்த நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், அதற்காக இலங்கை அரசுக்கு இரு ஆண்டு கால அவகாசம் அளிப்பதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இலங்கை போர்க் குற்றம் குறித்து முழுவதும் வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் நாங்கள் எடுத்துச் செல்வோம். இலங்கை அரசமைப்புச் சட்டம், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதில்லை என்று கூறுவது தவறானது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com