வேட்பாளர் தேர்வில் தனது கருத்துக்கு மதிப்பளிக்காத காரணத்தால் காங்கிரஸ் தலைவர் பதவியை அசோக் சவான் ராஜிநாமா செய்யவுள்ளதாக ஆடியோ பதிவு சனிக்கிழமை வெளியானது.
மக்களவைத் தேர்தலில் மஹாராஷ்டிராவின் சந்திரபூர் தொகுதியில் நான் பரிந்துரைத்தவருக்கு பதிலாக முன்னாள் நாகபுரி எம்.பி. விலாஸ் முட்டெம்வார் மகன் விஷால் முட்டெம்வார், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனது கருத்துக்கு இங்கே மதிப்பில்லை.
எனது நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்க முயற்சித்தேன். ஆனால், அது பலனளிக்கவில்லை. எனவே மஹாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று அசோக் சவான் பேசியதாக ஆடியோ பதிவு வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அசோக் சவான், தனிப்பட்ட பேச்சுவார்த்தையை பொதுப்பிரிவில் பேச விரும்பவில்லை. இது உள்கட்சி விவகாரம். அதில் என்னுடன் பேசியவர் சக கட்சி உறுப்பினர்.
எனவே அதன் நம்பகத்தன்மையை பாதுகாப்பது எனது பொறுப்பு என்று விளக்கமளித்துள்ளார். மேலும் தன்னுடைய நிலைப்பாடு தொடர்பாக கட்சி மேலிடத்துக்கு தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.