இரவுபகல் பாராது பணியாற்றும் காவலாளிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கவலையில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊதியம் தரவில்லை என்று 10,000 காவலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று நாட்டில் காவலாளிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நானும் நாட்டின் காவலாளி என்று கூறி காவலாளிகளின் பின்னால் மோடி ஒளிந்துகொண்டிருக்கிறார். ஆனால் காவலாளிகள் குறித்த கவலை சிறிதும் இல்லை. குறைந்தபட்சம் அவர்களை குறித்தாவது மோடி நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளர். அத்துடன், காவலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செய்தியையும் பதிவேற்றம் செய்திருந்தார்.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, நானும் நாட்டின் காவலர் என்ற பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி உள்பட பல பாஜக தலைவர்களும் சுட்டுரையில தங்கள் பெயருக்கு முன்பாக காவலர்(செளகிதார்) என்ற பெயரை இணைத்துக் கொண்டுள்ளனர். அதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.