காஷ்மீரில் சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்ய முடியாத ஆத்திரத்தில் ஆதிஃப் மிர் எனும் 12 வயது சிறுவனை பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர்.
ஸ்ரீகரில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு காஷ்மீரில் அமைந்துள்ள ஹாஜின் என்ற கிராமத்தில் வெள்ளிக்கிழமை இக்கொடூரச் சம்பவம் நடந்ததாக ஜம்மு-காஷ்மீர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவர் அந்த 12 வயது சிறுவனின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து அவரது சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அதற்குள் அந்த குடும்பத்தினர் சிறுமியை பத்திரமாக வெளியேற்றியுள்ளனர். இருப்பினும் பயங்கரவாதிகள் அந்த குடும்பத்தினரை தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலும் அங்கிருந்த கிராமத்து முதியவர் ஒருவர், அச்சிறுவனை பத்திரமாக ஒப்படைக்க வேண்டி பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், அது பலனளிக்கவில்லை.
இந்நிலையில், அக்குடும்பத்தினரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். மேலும் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.