உலகில் வேகமாக பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மக்கள் தொடர்பு இயக்குநர் கெரி ரைஸ் வியாழக்கிழமை கூறியதாவது:
உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை மறுக்க முடியாது.
கடந்த 5 ஆண்டுகளில் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 7 சதவீதமாக உள்ளது.
இந்த 5 ஆண்டுகளாக, இந்திய அரசு முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டது.
எனினும், பொருளாதார வளர்ச்சியின் வேகத்தைத் தக்கவைக்க வேண்டுமென்றால், இந்திய அரசு இன்னும் தீவிரமான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முக்கியமாக, பல்வேறு நிலப் பிரிவுகளைக் கொண்ட இந்தியாவில், அனைத்துப் பகுதிகளுக்கும் சரிசமமான பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பொருளாதார நிலவரம் குறித்து, விரைவில் வெளியிடப்படவிருக்கும் உலகப் பொருளாதார ஆய்வு அறிக்கையில் (டபிள்யூஈஓ) விவரமாகத் தெரிவிக்கப்படும்.
இந்திய வங்கிகள் மற்றும் பொது நிறுவனங்களின் நிதிநிலையை சீர்செய்வது, பொருளாதார சீர்திருத்த வேகத்தை குறையாமல் பார்த்துக் கொள்வது, சந்தை - தொழிலாளர் - நில சீர்திருத்தங்களை மேற்கொள்வது, தொழிலுக்கு உகந்த சூழலை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை இந்திய அரசிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் கெரி ரைஸ்.