இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக, துணை அட்மிரல் கரம்வீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கடற்படை தலைமைத் தளபதி சுனில் லாம்பாவின் பதவிக் காலம் வரும் மே மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்தப் பதவிக்கு, துணை அட்மிரல் கரம்வீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மே மாதம் 31-ஆம் தேதியிலிருந்து அவர் கடற்படைக்கு தலைமையேற்பார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினத்திலுள்ள கிழக்கு மண்டலத்தின் கடற்படை தளபதியாக கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பொறுப்பு வகித்து வரும் கரம்வீர் சிங், கடற்படை துணைத் தளபதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
கடற்படை தலைமைத் தளபதி பதவிக்கு இதுவரை பணி மூப்பின் அடிப்படையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்தார்கள்.
ஆனால், இந்த முறை அந்த வழக்கத்தை மாற்றி, தகுதியின் அடிப்படையில் தலைமைத் தளபதி நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.1959-ஆம் ஆண்டில் பிறந்த கரம்வீர் சிங், இந்திய கடற்படையில் கடந்த 1980-ஆம் ஆண்டு இணைந்தார். அவர் கடற்போர் பயிற்சியில் பட்டம் பெற்றவர் ஆவார். தனது 37 ஆண்டு அனுபவத்தில் 4 போர் கப்பல்களுக்கு அவர் தலைமை வகித்துள்ளார்.