மக்களவைத் தேர்தலுக்கான 8-ஆவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது. இதில் கர்நாடகம், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலுக்காக 218 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
இதன்படி, மக்களவை காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக மாநிலம் குல்பர்காவில் மீண்டும் போட்டியிடுகிறார். மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண் நான்தேட் தொகுதியில் களம் காண்கிறார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், போபால் தொகுதியிலும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், நைனிடால் தொகுதியிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். முன்னாள் பாஜக தலைவர் பி.சி. கந்தூரியின் மகன் மணீஷ் கந்தூரிக்கு கர்வால் தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, கே.எம். முனியப்பா ஆகியோர் முறையே சிக்பலாபூர், கோலார் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளரான மீனாக்ஷி நடராஜன், மத்தியப் பிரதேசத்தின் மன்டெüர் தொகுதியிலும், கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி, உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா தொகுதியிலும் களம் காண்கின்றனர்.