புது தில்லி: அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தின் போது வாகனப் பேரணிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் வாகனங்களில் வீதி வீதியாக உலா வருவதும் வாகனங்களில் பேரணி நடத்துவதும் வழக்கம். இத்தகைய பேரணிகளுக்கு தடை விதிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இருவர் தாக்கல் செய்த மனுவில் இத்தகைய பேரணிகளின் காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இச்செயல், தேர்தல் கமிஷன் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
திங்களன்று இந்த மனுவானது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி தீபிகா குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை நாங்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.