இந்திய நிறுவனமான அக்கார்டு குழுமம் மற்றும் ஓமன் நாட்டின் ரூ.26,630 கோடி நிதியுதவியுடன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணியை இலங்கை அரசு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் 70ஆவது பிறந்த தினமும் (மார்ச் 24) அன்றைய தினமாக அமைந்தது. ரணில் கூறுகையில், "இந்தியா, ஓமன், சீனா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு நிதியுதவி கிடைத்து வருகிறது. இலங்கையின் அம்பணத்தோட்டம் பகுதி சர்வதேச முதலீட்டு மண்டலமாக அமைந்துள்ளது' என்றார்.
ஓமனும், இலங்கையும் பல ஆண்டுகளாக நட்புறவில் இருந்து வருகிறது என்று ஓமன் பெட்ரோலியத் துறை அமைச்சர் முகமது ஹமத் அல் ரூமி தெரிவித்தார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 3.85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.26,630 கோடி) நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை பெறுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். 4 ஆண்டுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து ஓமன் அரசுக்கு தெரியாது என்று கடந்த வாரம் செய்தி வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது.
அம்பணத்தோட்டம் துறைமுகத்தை 99 ஆண்டுகள் சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. இலங்கையில் இந்திய நிறுவனம் முதலீடு செய்வதை எதிர்க்கவில்லை என்று சீனா சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது.