"பணக்காரர்களுக்கு மட்டுமே பாஜகவினர் காவலாளிகளாக இருந்துவருகின்றனர். ஏழை மக்கள் குறித்து அவர்கள் சிந்துத்துப் பார்ப்பதில்லை' என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டதாவது:
கரும்பு விவசாயிகள் இரவுபகலாக அரும்பாடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.10,000 கோடி நிலுவைத் தொகையைக் கூட, உத்தரப் பிரதேச அரசு வழங்க மறுத்து வருகிறது. அந்தத் தொகை வழங்கப்படாததால், அவர்களுடைய குழந்தைகளின் கல்வி, உணவு, சுகாதாரம், அடுத்த சாகுபடி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய "காவலாளிகள்' பணக்காரர்களுக்காக மட்டுமே பணியாற்றி வருகின்றனர். ஏழை மக்கள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை என்று அவர் பதிவிட்டிருந்தார்.
யோகி ஆதித்யநாத் பதிலடி:
பிரியங்காவின் கருத்து குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
மாநிலத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றபோது, கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.57,800 கோடியாக இருந்தது. பல்வேறு மாநிலங்களின் பட்ஜெட் தொகையை விட இது அதிகமாகும்.
ஆனால், அந்தத் தொகையை நாங்கள் விவசாயிகளுக்கு வழங்கினோம். முன்னர் ஆட்சியில் இருந்த பகுஜன் சமாஜ், சமாஜவாதி கட்சிகள் கரும்பு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால், அவர்கள் பசியிலும், பட்டினியிலும் தவித்தனர்.
தற்போது கரும்பு விவசாயிகளின் நலனுக்குக் குரல் கொடுப்பவர்கள், 2012 முதல் 2017-ஆம் ஆண்டு வரை எங்கு இருந்தார்கள்? தூக்கத்தில் இருந்து தற்போது விழித்ததற்கான காரணம் என்ன? மாநிலத்தில் கரும்பு சாகுபடி பரப்பு, 22 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. மூடப்பட்டிருந்த கரும்பு ஆலைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.