மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் ஊதியத் தொகையை உயர்த்திட மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் இன்று (செவ்வாய்கிழமை) அனுமதி கோரியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலில், 2019-20 நிதியாண்டில் இந்த திட்டத்துக்காக ரூ. 60,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது 2018-19 நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட தொகையை (ரூ. 55,000 கோடி) காட்டிலும் 11 சதவீதம் அதிகமாகும். இந்த ஊதிய உயர்வு புதிய நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்படுகிறது.
அதேசமயம், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், இந்த ஊதிய உயர்வை அமல்படுத்துவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். எனினும், இந்த ஊதிய உயர்வு தற்போதைய ஊதியத்தை காட்டிலும் 5 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்கும்.