பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்கிழமை இணைந்தார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மன்சு மோகன் பாபு. மேலும் திருப்பதியில் இயங்கி வரும் பிரபல ஸ்ரீ வித்யாநிகேதன் கல்வி நிறுவனத்தின் தலைவருமாவார்.
இவர், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் செவ்வாய்கிழமை இணைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தெலுங்கு மக்களுக்காக ஜெகன் மோகன் ரெட்டி பல நன்மைகள் செய்வார். அவர்தான் ஆந்திராவின் அடுத்த முதல்வர்.
நான் பதவிக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு இக்கட்சியில் இணைவில்லை. ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமா ராவ் உடன் இணைந்து அரசியல் பணியாற்றியுள்ளேன் என்றார்.
முன்னதாக, கல்லூரி மாணவர்களுக்கு ஆந்திர அரசின் கல்வி நிதியுதவி சரியாக வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி, கடந்த வாரம் மாணவர்களுடன் இணைந்து மோகன் பாபு போராட்டம் நடத்தினார். அப்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இந்த போராட்டத்தின் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குறித்து ஊழல் உட்பட பல குற்றச்சாட்டுக்களை மோகன் பாபு முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.