மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என பாஜக தன்னிடம் தெரிவித்ததாக முரளி மனோகர் ஜோஷி (85) செவ்வாய்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முரளி மனோகர் ஜோஷி, தனது கான்பூர் தொகுதி மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்ததாவது:
அன்புள்ள கான்பூர் தொகுதி மக்களுக்கு, வருகிற மக்களவைத் தேர்தலில் கான்பூர் மட்டுமல்லாது எந்த தொகுதியிலும் நான் போட்டியிடக்கூடாது என பாஜக தேசிய செயலர் ராம்லால் தெரிவித்துவிட்டதாக கூறினார்.
முன்னதாக, 2014 மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட தனது வாரணசி தொகுதியை விட்டுக்கொடுத்து கான்பூர் தொகுதியில் முரளி மனோகர் ஜோஷி களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான அத்வானிக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவரது காந்திநகர் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா களமிறங்குகிறார்.