தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு கூறாமல் எதிர்க்கட்சிகளை மட்டும் விமர்சித்து கொண்டிருப்பது ஏன் என்று சமாஜவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருவதை குறிப்பிட்டு அகிலேஷ் யாதவ் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், மக்கள் நிரந்தரமான பணியைத்தான் விரும்புவார்கள். காவலாளி வேலையை அல்ல.
வேலைவாய்ப்பின்மை பிரச்னையைப் போக்குவதாக கூறிய பாஜக தற்போது வரை ஒன்றும் செய்யவில்லை. ஒவ்வொரு பிரசாரக் கூட்டத்திலும் பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சிகளை மட்டுமே விமர்சித்து வருகின்றனர்.
பிரசாரக் கூட்டத்தில் பட்டியலிடும் அளவுக்கு கடந்த 5 ஆண்டு ஆட்சியில் பாஜக அரசு எந்த சாதனையையும் செய்யவில்லையா? மக்களின் அதிருப்தியையும், தோல்வி பயத்தையும் நினைத்து, பாஜக தலைவர்களும், தொண்டர்களும் அற்பக் காரணங்களைக் கூறி பிரசாரத்துக்கு செல்லாமல் தவிர்த்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.