வரும் மக்களவைத் தேர்தலில், தெலங்கானா மாநிலத்தில் போட்டியிடப்போவதில்லை என்று தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த 1982-ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் தொடங்கப்பட்ட பிறகு அக்கட்சி தேர்தலைப் புறக்கணிப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் திங்கள்கிழமை கூறியதாவது:
தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, அந்த மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் பலர் அணி மாறி, டிஆர்எஸ் கட்சியில் இணைந்து விட்டனர். அந்த மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியை இல்லாமல் செய்வதற்காக அனைத்து வழிகளிலும் டிஆர்எஸ் கட்சி முயன்று வருகிறது.
இந்நிலையில், தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டால், அது, பாஜகவுக்கும், ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும் மறைமுகமாக உதவி செய்வதாக இருக்கும். எனவே, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது.